search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்"

    • முதலமைச்சர் வெளிநாடு சென்று வந்த பிறகு இந்த திட்டத்தை தொடங்கலாம் என திட்டமிட்டுள்ளோம்.
    • சென்னை மீஞ்சூரில் 100 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் நன்றாக செயல்பட்டு வருகிறது.

    சென்னை:

    நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் 2013-ம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறது. இங்கிருந்து தினமும் 10 கோடி லிட்டர் நீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு திருவான்மியூர், ஈச்சம்பாக்கம், பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் முதலாவது ஆலைக்கு அருகே ஜெர்மன் நாட்டு நிதியுதவியுடன் ரூ.1516.82 கோடியில் 2-வது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் இப்போது முடிவுறும் தருவாயில் உள்ளது.

    இதுகுறித்து அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-

    நெம்மேலியில் அமைக்கப்பட்டுள்ள 2-வது கடல் நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகள் முடிந்துள்ளதால் இன்னும் 10 நாட்களில் இதை திறக்க முடிவு செய்துள்ளோம். முதலமைச்சர் வெளிநாடு சென்று வந்த பிறகு இந்த திட்டத்தை தொடங்கலாம் என திட்டமிட்டுள்ளோம்.


    நெம்மேலியில் 2-வது நிலையத்தில் இருந்து தென்சென்னை பகுதிகளான வேளச்சேரி, ஆலந்தூர், புனித தோமையார்மலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்க்கட்டளை, மூவரசம்பேட்டை, சோழிங்கநல்லூர், மடிப்பாக்கம், தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் உள்ள 9 லட்சம் மக்கள் பயன் அடைவார்கள்.

    சென்னை மீஞ்சூரில் 100 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் நன்றாக செயல்பட்டு வருகிறது. நெம்மேலியில் 2 நிலையங்கள் உள்ள நிலையில் போரூரில் 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையமும் அமைக்கப்பட்டு வருகிறது. இது 2026 டிசம்பரில் செயல்பாட்டுக்கு வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பழைய துறைமுக பகுதியில் ரூ.5½ கோடியில் நகர பொழுதுபோக்கு பூங்கா திறக்கப்படும்.
    • புதுவை, காரைக்காலில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க கோவில்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதுச்சேரி:

    சுதந்திர தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தேசிய கொடி ஏற்றினார். அதைத் தொடர்ந்து அவர் சுதந்திர தின உரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பெரியகாலாப்பட்டில் ரூ.20 கோடியிலும், நல்லவாடில் ரூ.19 கோடியிலும் மீன் இறங்கு தளம் அமைக்கவும், தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தை ரூ.54 கோடியில் விரிவாக்கம் செய்யவும் மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. விரைவில் இந்த பணிகள் தொடங்கப்படும்.

    தட்டாஞ்சாவடியில் ரூ.528 கோடியில் சட்டசபை வளாகம், காலாப்பட்டில் ரூ.483 கோடியில் தேசிய சட்ட பல்கலைக்கழகம் கட்டப்பட உள்ளது. பாண்டி மெரினா கடற்கரையில் ரூ.14½ கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த நீரை குழாய்கள் மூலம் கொண்டுசெல்ல ரூ.12½ கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    மழை காலத்திற்கு முன்பாக அனைத்து வாய்க்கால்களும் 190 கி.மீ. நீளத்துக்கு சுமார் ரூ.4½ கோடியில் தூர்வாரப்படும்.

    பிள்ளையார்குப்பம் படுகை அணை ரூ.20 கோடியிலும், பாகூர் ஏரிக்கரையில் ரூ.8 கோடியில் ஒருவழிப் பாலம், கொம்பந்தான்மேடு அணைக்கட்டு ரூ.13 கோடியில் கரைகளை செம்மைப்படுத்துதல், குடுவையாற்றில் ரூ.2 கோடியில் படுகை அணை கட்டுவது உள்ளிட்ட நீர் நிலை மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படும்.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அண்ணா திடல் கட்டுமான பணி முடிவடைந்து இந்த ஆண்டே திறக்கப்படும். சின்னையாபுரத்தில் ரூ.23 கோடியில் 220 அடுக்குமாடி குடியிருப்புகள் இந்த நிதியாண்டில் முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும். ரூ.23 கோடியில் மின்சார பஸ்கள் வாங்கப்பட்டு இந்த நிதியாண்டிற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    கிழக்கு கடற்கரை சாலையில் நவீன மீன் அங்காடிக்கு அருகில் ரூ.15 கோடியில் மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் பஸ்களுக்கு தனி பஸ் ஸ்டாண்டு கட்டப்படும். தாவரவியல் பூங்கா ரூ.15 கோடியில் மேம்படுத்தப்படும். சுதேசி பஞ்சாலை வளாகத்தில் ரூ.5½ கோடியில் நகர காட்டுப் பகுதி பசுமை பூங்காவாக மேம்படுத்தப்படும். வ.உ.சி., கலவை கல்லூரி, பான்சியானா பள்ளிகள் பழமை மாறாமல் மீண்டும் கட்டப்பட்டு மாணவர்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும்.

    பழைய துறைமுக பகுதியில் ரூ.5½ கோடியில் நகர பொழுதுபோக்கு பூங்கா திறக்கப்படும். புதுவை நகர பகுதியில் ஒட்டுமொத்த பாதாள சாக்கடை திட்டமும் ரூ.50 கோடியில் சீரமைக்கப்படும். புதுவையில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பேணப்படுவதால் கடந்த காலங்களைவிட குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளது.

    சுதேஷ் தர்ஷன் 2.0 திட்டத்தின் கீழ் சுற்றுலா தலங்களை மேம்படுத்த விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. புதுவை, காரைக்காலில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க கோவில்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் அறிவித்த அனைத்து திட்டங்களையும் படிப்படியாக செயல்படுத்துவோம்.

    புதுவையை முன்னேறிய மாநிலமாக மாற்ற எங்கள் அரசின் செயல்பாட்டிற்கு நீங்கள் அளிக்கும் ஆதரவு, ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவிக்கிறோம்.

    இந்த ஆதரவை தொடர்ந்து வழங்க வேண்டும் எனக்கேட்டு அனைவருக்கும் உளம் நிறைந்த சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×